எள் சாகுபடியில் மகசூல் அதிகரிக்க அறிவுரை; வேளாண் இணை இயக்குனர் விளக்கம்
பொள்ளாச்சி : பாரம்பரிய பயிரான எள் சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.கோவை வேளாண் இணை இயக்குனர் வெங்கடாசலம் அறிக்கை:விதைப்பண்ணை வாயிலாக எள் விதைகளை உற்பத்தி செய்து, விதைகளை வேளாண் துறையின் கீழ், தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமையின் வாயிலாக, ஒரு கிலோ ஆதார நிலை விதைக்கு, 167 ரூபாய்க்கும், சான்று நிலை விதை, 170 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.தேசிய எண்ணெய் வித்துகள் இயக்கத்தின் கீழ், செயல்விளக்கத்திடல் மற்றும் விதைகள் வினியோகத்தில், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. மாசி, ஆடி, புரட்டாசி, மார்கழி பட்டம் சாகுபடிக்கு ஏற்றதாகும்.ஒரு ஹெக்டேருக்கு, 5 கிலோ விதை போதுமானது. விதைக்கும் முன் அசோஸ்பைரில்லம், 100 மில்லி மற்றும் பாஸ்போபாக்டீரியா, 100 மில்லியுடன் நன்கு கலந்து நிழலில் உலர்த்தி பின் விதைக்கலாம். ரசாயன முறையில், ஒரு கிலோ விதைக்கு கார்பன்டாசிம், 2 கிராம் கலந்து விதைக்கலாம்.விதைத்த, 15 நாட்களுக்குள் குறைந்த எண்ணிக்கையில் முளைத்த பயிர்களுக்கு இடைவெளி நிரப்புதல் வேண்டும். விதைக்கும் முன் நிலத்தினை உழுது மக்கிய தொழு எரு அல்லது மண்புழு உரம் இட வேண்டும்.விதையின் வரிசை முறையில் விதைக்கலாம் அல்லது ஐந்து கிலோ விதையினை, 20 கிலோ மணலுடன் கலந்தும் விதைக்கலாம். விதைத்த, 25 நாட்களுக்கு பின் கைகளால் களை நிர்வாகம் செய்ய வேண்டும். மண்பரிசோதனை பரிந்துரையின்படி, உரமிட வேண்டும்.இறவைக்கு, ஒரு ஏக்கருக்கு, தழைச்சத்து (யூரியா 30 கிலோ), மணிச்சத்து (சூப்பர் பாஸ்பேட், 60 கிலோ) மற்றும் சாம்பல் சத்து (8 கிலோ) என்ற அளவில் உரமிட வேண்டும்.இறவை மற்றும் மானாவாரி பயிருக்கு முழு அளவு தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை அடி உரமாக இட வேண்டும். ெஹக்டேருக்கு அசோஸ்பைரில்லம், 500 மில்லி மற்றும் பாஸ்போபாக்டீரியா, 500 மில்லி உயிர் உரங்களை அடியுரமாக இடலாம்.ஏக்கருக்கு, ஐந்து கிலோ மாங்கனிசு சல்பேட்டை, 20 கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் துாவுவதன் வாயிலாக, மாங்கனீசு பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யலாம். ஒரு ெஹக்டேருக்கு, 12.5 கிலோ தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை வழங்கும் எண்ணெய் வித்து நுண்ணுாட்ட கலவையினை, செறிவூட்டப்பட்ட தொழு உரமாக மானாவாரி பயிருக்கும் அடியுரமாக இட வேண்டும். இதனால், பெரும்பாலான நுண்ணுாட்ட சத்துக்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யலாம்.எள் பயிரில் பூப்பிடிக்காமை பிரச்னையை நிவர்த்தி செய்ய விதைத்த, 40ம் நாள் ஏக்கருக்கு, 150 மி.லி., பிளோனாபிக்ஸ், 40 பி.பி.எம்., மற்றும் ஒரு சதம் டி.ஏ.பி., கரைசலை கலந்து மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.எள் விதைத்த, 30 மற்றும், 50ம் நாள் ஏக்கருக்கு, 20 கிராம் சாலிசிலிக் அமிலத்தை, 200 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பதால், 20 சதம் மகசூலை அதிகரிக்கலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை!
தளிர் பிணைக்கும் புழுக்கள் மற்றும் எள் காய் ஈயினை கட்டுப்படுத்த ஏக்கருக்கு, 400 மி.லி., குயினால்பாஸ், 25 இ.சி., மருந்தினை, 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம். அல்லது 2 சதம் வேப்ப எண்ணெய் கரைசல் அல்லது, 0.03 சதம் வேம்பு சார்ந்த மருந்துகளை இருமுறை பூக்கும் தருணத்துக்கு முன்பு தெளிக்க வேண்டும்.எள் காய் துளைப்பான், காய் நவாய் பூச்சியை, ஏக்கருக்கு, 200 மி.லி.,இமிடாகுளோப்ரிட், 17.8 எஸ்எல் 250 மி.லி., மருந்தை தெளித்து கட்டுப்படுத்தலாம். வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு, ஒரு கிலோ சூடோமோனாஸ் அல்லது டிரைக்கோடெர்மா எதிர் உயிரி பூஞ்சாணக்கொல்லி மருந்தை, 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்த, 30ம் நாளில் மண்ணில் இடலாம்.இலைப்புள்ளி நோய்களை ஏக்கருக்கு, 400 கிராம் என்ற அளவில் மேங்கோசெப் மருந்தை தெளித்து கட்டுப்படுத்தலாம், என, இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.