மருத்துவமனை நிர்வாக செயல்பாடுகளில் மாற்றம் பொறுப்புகள் பகிர்ந்தளிக்க ஆலோசனை
கோவை: கோவை அரசு மருத்துவமனையில், டாக்டர்களுக்கு பொறுப்புகளை பகிர்ந்து அளிக்க ஆலோசித்து வருவதாக டீன் கீதாஞ்சலி தெரிவித்தார். கோவை அரசு மருத்துவமனையில், ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் சூழலில், சிகிச்சை செயல்பாடுகள் மட்டுமின்றி, நோயாளிகள் பாதுகாப்பு, உபகரணங்கள் கொள்முதல் பராமரிப்பு, மருந்துகள் வினியோகம், சுகாதாரம், பொதுப்பணித்துறை சார்ந்த மேம்பாட்டு பணிகள், காப்பீ டு சார்ந்த செயல்பாடுகள், உணவு தயாரிப்பு மற்றும் வினியோகம், டாக்டர்கள் மற்றும் அலுவலர்கள் பணி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் உள்ளன. அனைத்து பணிகளையும் கண்காணிக்கும் பொறுப்பு, மருத்துவமனை டீன் ஒருவரே மேற்கொண்டு வருகிறார். இது தவிர, மருத்துவ கல்லுாரி நிர்வாக பணி, ஆராய்ச்சிகள், பாடத்திட்டம் என பிற பணிகளும் மேற்கொள்ளவேண்டிய சூழல் உள்ளதால், பணிப்பளு அதிகரிப்பதுடன், பணிகளில் தொய்வும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால், சக டாக்டர்களுக்கு பொறுப்புகளை பகிர்ந்து அளிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து, டீன் கீ தாஞ்சலி கூறுகையில், ''நுாறாண்டுகளுக்கு மேல் பழமையான அரசு மருத்துவமனை இது. ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் பயனடை கின்றனர். மக்களுக்கு மேலும், சேவை எளிதாகவும், விரைவாகவும் கிடைக்கும் நோக்கில் பொறுப்புகளை டாக்டர்கள், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்களுக்கு பகிர்ந்து வழங்க ஆலோசித்துள்ளோம். நோயாளிகளின் தகவல்கள் பராமரிப்பு, டிஜிட்டல் செயல்பாடுகள், மக்கள் தொடர்பு, மருத்துவமனை பாதுகாப்பு என அனைத்து பொறுப்புகளையும் அதற்கு தகுதியான நபர்கள் கண்காணித்து அவ்வப்போது குறைபாடுகளை களைய அறிவுறுத்தப்படும். இத்திட்டம் ஆலோசனை அளவில் உள்ளது விரைவில் நடைமுறைப்படுத்த செயல்பாடுகள் துவக்கப்படும்,'' என்றார்.
முன்னெச்சரிக்கை
பருவமழை துவங்கியுள்ளதால், மருத்துவமனை கட்டடங்களின் தன்மைகளை உறுதி செய்தல், தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும், மின் ஒயர்கள் பரிசோதித்து விபத்துக்களை தவிர்க்கவும் அந்தந்த துறை பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக டீன் கீதாஞ்சலி தெரிவித்தார்.