அரிசி கடத்தல் வழக்கில் ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் தேடப்படடும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில், பழநி, பழைய ஆயக்குடியை சேர்ந்த சின்னதம்பி,31, பாண்டியன்,24, நாகபட்டிணத்தை சேர்ந்த குருமூர்த்தி,49, கோவை கரும்புக்கடையை சேர்ந்த பைசல் ரகுமான்,24, கோவை முத்து காலனியை சேர்ந்த ரஹீம்,23, உக்கடம் ஜான்சா,33 ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்,4ல் நடக்கிறது. விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவர்கள், குற்றம் சாட்டப்பட்ட நீதிமன்றத்தில் நேரிலோ, வக்கீல் வாயிலாகாவோ, ஆஜராகும்படி குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். பொள்ளாச்சி குடிமைப்பொருள் போலீசார், சம்மன் வழங்க சம்பந்தப்பட்ட முகவரிகளுக்கு சென்ற போது அவர்கள் அங்கு வசிக்கவில்லை. அவர்கள் குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை. கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.