நகர ஊரமைப்பு இணை இயக்குனர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு; மழை நீரை அகற்ற முயன்ற தொழிலாளி உயிரிழப்பு ஜெராக்ஸ் கடை வாயிலாக லஞ்சம் பெற்றது அம்பலம்
கோவை : புரோக்கர், ஜெராக்ஸ் கடைக்காரர்கள் மூலமாக லஞ்சம் பெற்றதாக, நகர ஊரமைப்பு இணை இயக்குனர் (பொ) ராஜகுரு மீது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.காந்திமாநகரில் நகர ஊரமைப்பு இணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. கட்டட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி, நிலப்பயன் மாற்ற அனுமதி பெற லஞ்சம் கேட்பதாக, கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் வந்தது.புகாரையடுத்து, கடந்த 23ம் தேதி, இணை இயக்குனர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சோதனைக்காக சென்ற போது, நகர ஊரமைப்பு அலுவலகத்திற்கு வரும் மக்களில் பலர், தங்களின் ஆவணங்களுடன் அலுவலகத்தின் எதிரில் உள்ள, ஜெராக்ஸ் கடைக்கு சென்று வருவதை கவனித்தனர்.அந்த கடைக்குள் சென்று பார்த்தபோது, கடை உரிமையாளர் பொன்னப்பன் என்பவரின் மேஜையில், சுமார் ரூ.4 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் இருந்தன. விசாரணை நடத்திய போது ஜனார்த்தனன் என்பவர், வணிக கட்டட அனுமதிக்காக, பணம் கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து, பொன்னப்பன், ஜனார்த்தனனிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அதில், ஜனார்த்தனன் தனது கட்டட அனுமதிக்காக ஏற்கனவே ரூ. 12 லட்சம் கொடுத்து விட்டதாகவும், அதன்பின்னர் மேலும், ரூ.3 லட்சத்து 96 ஆயிரத்து 100 பணத்தை கொடுத்த பிறகு தான், வணிக கட்டடத்திற்கான திட்ட அனுமதி ஆணையை, பொன்னப்பன் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.இதனால், அந்த பணம் நகர ஊரமைப்பு அதிகாரிக்கு லஞ்சமாக கொடுக்க, ஜனார்த்தனிடம் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில், பணத்தையும், ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர். பின்னர், கோவை மாவட்ட நகர ஊரமைப்பு இணை இயக்குனர் (பொ) ராஜகுரு மற்றும் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பொன்னப்பன் மீது வழக்கு பதிவு செய்தனர்.