போட்டிகளுக்கு தயாராகவா; பருவத்தேர்வுக்கு தயாராகவா?
கோவை; அரசு பள்ளிகளில் முதல் பருவத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், இலக்கிய மன்றம் மற்றும் வினாடி-வினா போட்டிகளை நடத்த வேண்டும் என விடுக்கப்பட்ட அறிவுறுத்தல், குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே, பாடக்கல்வி தவிர்த்த கலை மற்றும் பொது அறிவுத் திறன்களை வளர்க்கும் நோக்கில், பள்ளிகளில் இலக்கிய மன்றம் மற்றும் வினாடி- வினா போன்ற செயல்பாடுகளை நடத்த, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும் 31க்குள் இந்தப் போட்டிகளை நடத்தி, விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான, முதல் பருவத்தேர்வுகளும் வரும் வாரம் முதல் தொடங்கவுள்ளது. இதனால், மாணவர்களை எதற்குத் தயார்படுத்துவது என்பதில் ஆசிரியர்களுக்கும், எதில் கவனம் செலுத்துவது என மாணவர்களுக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.