உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துணை சுகாதார நிலையம் அமைக்கணும்! எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை

துணை சுகாதார நிலையம் அமைக்கணும்! எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை

வால்பாறை : வால்பாறை, சக்தி - தலநார் எஸ்டேட் பகுதியில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை அடுத்துள்ளது கவர்க்கல் எஸ்டேட். இங்கிருந்து, 12 கி.மீ., தொலைவில், சக்தி - தலநார் எஸ்டேட் அமைந்துள்ளது. இங்குள்ள சக்தி, தலநார், பிளண்டிவேலி, மகாலட்சுமி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த இந்த எஸ்டேட் பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், தொழிலாளர்கள், 25 கி.மீ., தொலைவில் உள்ள வால்பாறை நகருக்கு செல்ல வேண்டியுள்ளது.சாதாரண காய்ச்சல், சளி என்றால் கூட, வால்பாறை நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டியுள்ளது. வால்பாறையில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காய்ச்சல் அதிக அளவில் பரவி வரும் நிலையில், இப்பகுதி தொழிலாளர்கள் சிகிச்சை பெற முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.தொழிலாளர்கள் கூறியதாவது:சக்தி - தலநார் எஸ்டேட் பகுதியில், தொழிலாளர்களின் நலன் கருதி ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, 12 ஆண்டுளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.எந்தவித மருத்துவ வசதி இல்லாத நிலையில், அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.எனவே, சக்தி - தலநார் எஸ்டேட் தொழிலாளர்களின் நலன் கருதி, தலநார் அரசு துவக்கப்பள்ளி அருகில், துணை சுகாதார நிலையம் கட்ட வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி