உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தார் விலை குறைவு: விவசாயிகள் ஏமாற்றம்

வாழைத்தார் விலை குறைவு: விவசாயிகள் ஏமாற்றம்

மேட்டுப்பாளையம்: வாழைத்தார்களின் விலை உயர்வு இல்லாததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை நால் ரோட்டில், தனியார் வாழைத்தார் ஏல மண்டி உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ஏலம் நடைபெறும். தற்போது வாழை அறுவடை சீசன் என்பதால், ஞாயிற்றுக்கிழமை ஏல மண்டிக்கு, அதிகளவில் வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம், அன்னூர், பவானிசாகர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து, 5000 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். மண்டியில் நடந்த ஏலத்தில் ஒரு கிலோ நேந்திரன் அதிகபட்சம், 25 ரூபாய்க்கும், கதளி அதிகபட்சம், 35 ரூபாய்க்கும் ஏலம் போனது. வாழைத்தார்கள் ஏலம் போனதில், பூவன் அதிகபட்சம், 250 ரூபாய்க்கும், ரஸ்தாலி அதிகபட்சம், 550க்கும், தேன் வாழை அதிகபட்சம், 450க்கும், செவ்வாழை அதிகபட்சம், 850 ரூபாய்க்கும், மொந்தன் அதிகபட்சம், 300க்கும், ரோபஸ்டா அதிகபட்சம், 150 ரூபாய்க்கும் ஏலம் போனது. மழையின் காரணமாக வாழைப்பழத்தின் பயன்பாடு குறைவாக உள்ளது. அதனால் விலை உயர்வு இல்லாததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இத்தகவலை வாழைத்தார் ஏல மண்டி நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, சின்னராஜ் ஆகியோர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை