பண்ணாரி அம்மன் கல்லுாரி மாணவன் ஹேக்கத்தானில் அசத்தல்
கோவை : தேசிய தடயவியல் ஹேக்கத்தான் 2025 போட்டியில், கோவை பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரி மாணவன் வெங்கடேஷ் இரண்டாம் இடத்தை தட்டிச்சென்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலை சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் 'தடயவியல் மின்னணுவியல்' என்ற தலைப்பில் ஹேக்கத்தான் போட்டி டெல்லியில் நடந்தது. டிஜிட்டல் தடயவியல் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் வகையில் ஐடியா சமர்ப்பிப்பு மற்றும் இறுதிச்சுற்று என்ற இரண்டு பிரிவுகளில் போட்டி நடந்தது. நாடு முழுவதும் இருந்து, 400க்கும் மேற்பட்ட பிரிவுகளில் இருந்து, 21 அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவன் வெங்கடேஷ் செய்திகளின் நம்பகத்தன்மையை தரம் பிரிக்கும் வகையில், கருவி கண்டுபிடித்து சமர்ப்பித்தார்.இப்புதிய கண்டுபிடிப்புக்கு, இரண்டாம் பரிசும், ஒரு லட்சம் ரொக்கப்பரிசும் கிடைத்தது. கல்லுாரி நிர்வாகிகள் மாணவன் வெங்கடேஷை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.