மருத்துவமனையில் ரத்த தான முகாம்
வால்பாறை; வால்பாறை அருகே, அய்யர்பாடி மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது.வால்பாறை அரசு மருத்துவமனை மற்றும் பொள்ளாச்சி மாவட்ட தலைமை மருத்துவமனை இணைந்து, அய்யர்பாடி எஸ்டேட் மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடத்தியது.முகாமை பொள்ளாச்சி அரசு மருத்துவமனை டாக்டர் மாரிமுத்து, செவிலியர் கண்காணிப்பாளர் தனலட்சுமி, அய்யர்பாடி எஸ்டேட் மருத்துவமனை டாக்டர் சுமதி ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் மொத்தம், 54 பேர் கலந்து கொண்டு, ரத்ததானம் செய்தனர்.அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், 'வால்பாறை மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளில், நோயாளிகள் நலன் கருதி ரத்த வங்கி செயல்படுகிறது. அறுவை சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு, போதிய அளவு ரத்தம் கிடைப்பதில்லை. எனவே இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் அதிக அளவில் அரசு மருத்துவமனைகளில் ரத்தம் தானம் செய்ய முன் வர வேண்டும்,' என்றனர்.