ரேஷன் கடைகளில் தராசுடன் புளூடூத் இணைப்பு; இனி இருக்காது பொருட்களின் எடை குறைப்பு
கோவை : ரேஷன் கடைகளில் எடைபோடும் எக்ட்ரானிக் தராசை, பிஒஎஸ் மெஷினுடன் புளூடூத் மூலம் இணைத்து, பில் போடும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.கோவை மாவட்டத்தில், 1540 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 1377 ரேஷன் கடைகள் கூட்டுறவு சங்கம் செயல்படுத்தி வருகிறது. ரேஷன் கடைகளில் வாங்கும் உணவு பொருட்கள் சரியான எடையில் இல்லாமல், எடைக்குறைவாக வழங்கப்படுகின்றன என்ற புகார், பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வழங்கல் துறை சார்பில், ரேஷன் கடையில் எடைபோடும் எக்ட்ரானிக் தராசை, பில் போடும் பிஓஎஸ் மெஷினுடன் புளூடூத் மூலம் இணைத்து, பில் போடும் நடைமுறை, தமிழகம் முழுவதும் அமலுக்கு வர உள்ளது. கோவை மாவட்டத்தில் இதற்கான தொழில்நுட்பணிகள், தற்போது முடியும் தருவாயில் உள்ளது. நேற்று வரை, 600 கடைகளில் எலக்ட்ரானிக் தராசை புளூடூத்துடன் இணைத்து, எடை போடும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.கோவை மாவட்டத்தில் இந்த பணியை செயல்படுத்தி வரும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறுகையில், 'எக்ட்ரானிக் தராசை, பிஓஎஸ் மெஷினுடன் புளூடூத் மூலம் இணைக்கும் பணி, விரைவாக நடந்து வருகிறது. ஒரு நாளைக்கு, 100 கடைகளில் இணைப்பு பணி நடக்கிறது. இதுவரை மாவட்டத்தில் 600 கடைகளுக்கு மேல், புளூடூத் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதிக்குள் இந்த பணி முடிந்து விடும்' என்றனர்.