குழாயில் உடைப்பு; குடிநீர் வீணாகும் அவலம்
மேட்டுப்பாளையம்; குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இரவு பகலாக, குடிநீர் வீணாகி வருகிறது.மேட்டுப்பாளையம் நகரில் உள்ள பவானி ஆற்றில் இருந்து, திருப்பூர் மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கும், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. அதை சுத்தம் செய்து குழாய் வழியாக குடிநீர் அனுப்பப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சிக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது என, இரண்டு திட்டங்களுக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது. இந்த குடிநீர் குழாய்கள், மேட்டுப்பாளையம் நகரில் உள்ள சாலைகளிலும், அன்னூர் சாலைகளிலும் பதிக்கப்பட்டுள்ளன. இதில் நடூர் பாலம் அருகே, குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,'கடந்த ஒரு வாரமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இரவு பகலாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.திருப்பூரில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்ற நிலையில், குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் வேதனையை அளிக்கிறது. எனவே உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.