காவேரி கூக்குரல் இயக்கம்; ஒரு லட்சம் மரக்கன்று நடவு
தொண்டாமுத்துார்; ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு 68வது பிறந்தநாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. இந்நாளை, நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினமாக ஈஷா தன்னார்வலர்கள் கொண்டாடுகின்றனர். காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடும் விழா நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள, 235 ஏக்கர் பரப்பளவு உள்ள விவசாய நிலங்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட டிம்பர் மரங்கள் நடப்பட்டன. ஈஷா யோகா மையம் மற்றும் பேரூர் ஆதினம் இணைந்து செயல்படுத்தும், 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டத்தில், 24 கிராமங்களில் அரச மரக்கன்றுகள் நடப்பட்டன. கோவை ஈஷா யோகா மையத்தில், மண் காப்போம் இயக்கம் சார்பாக, விவசாய நிலங்களில் மண்வளம் மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்குவது, குழந்தைகளுக்கு மரக்கன்று வழங்குவது மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.