14 ஆயிரம் பேருக்கு ரூ.187 கோடி நகைக்கடன்: மத்திய கூட்டுறவு வங்கி வழங்கியது
பொள்ளாச்சி; கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகளில், நடப்பு நிதியாண்டில் இதுவரை, 14 ஆயிரம் பேருக்கு, ரூ.187 கோடி மதிப்பில் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள, 270 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உட்பட, மொத்தம் 1,085 கூட்டுறவு சங்கங்களும், 39 மத்திய வங்கி கிளைகளுடனும் செயல்படுகிறது. கடந்த, ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, பங்குத் தொகையாக, ரூ.104.45 கோடி, வைப்புகள் நிலுவையாக ரூ.2,325.09 கோடி, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன் நிலுவையாக ரூ.2,674.97 கோடியுடன் செயல்படுகிறது. கடந்த, ஏப்ரல் துவங்கிய நிதியாண்டில், ஜூன் 30 வரை, வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் விவசாயிகள் 2,032 பேருக்கு, ரூ.26.12 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு மூலதனக் கடனாக, 474 பேருக்கு, ரூ.3.49 கோடி வழங்கப்பட்டுள்ளது. நேரடி மத்தியக்காலக் கடனாக, 78 பேருக்கு, ரூ. 1.19 கோடி, நகைக்கடனாக, 14 ஆயிரத்து 277 பேருக்கு, ரூ.187 கோடி, வீட்டு வசதிக் கடனாக, 236 பேருக்கு, ரூ.5.6 கோடி, வீட்டு அடமானக் கடனாக, 70 பேருக்கு, ரூ.5.89 கோடி, மகளிர் சுய உதவிக்குழு கடனாக, 292 குழுவுக்கு, ரூ.33.97 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் கடனாக, 100 பேருக்கு 94.14 லட்சம், டாப்செட்கோ கடனாக, 18 பேருக்கு 21 லட்சம், டாம்கோ கடனாக, 56 பேருக்கு 58 லட்சம், கல்விக்கடனாக, 19 பேருக்கு 10 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. சிறு வியாபாரிகள் 700 பேருக்கு 3.47 கோடி, பணிபுரியும் மகளிர் 42 பேருக்கு 1.53 கோடி, பணிபுரியும் ஆண்கள் 73 பேருக்கு 3.63 கோடி, கைவினை கலைஞர்கள் 69 பேருக்கு, 34.10 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. தொழில் புரியும் கடனாக, 58 மகளிருக்கு 56 லட்சம், கலைஞர் கனவு இல்லம் கட்ட, 180 பேருக்கு 1.79 கோடி அனுமதிக்கப்பட்டு, 1.10 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் தங்கள் பயிர்களை பாதுகாப்பாக வைக்க ஏதுவாக, சரக்கீட்டு கடனாக 66 பேருக்கு 2.73 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.