நுாற்றாண்டு விழா பள்ளிக்கு சான்றிதழ்
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு, கோவை கலெக்டர் சான்றிதழ் வழங்கினார். தமிழகத்தில், நூறு ஆண்டுகளைக் கடந்த அரசு பள்ளிகளுக்கு, நூற்றாண்டு விழா எடுக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில், 58 பள்ளிகள் நூறு ஆண்டுகளை கடந்துள்ளது. இதில், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 1921ம் ஆண்டு துவங்கி, நூறு வருடங்களை கடந்து சிறப்பாக செயல்படுகிறது. இப்பள்ளிக்கு, மாவட்ட கலெக்டர் பவன்குமார் நுாற்றாண்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் கண்ணம்மாள் மற்றும் பி.டி.ஏ., தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.