சி.எம்.சி. காலனி மக்கள் போராட்டம்
கோவை: சித்தாபுதுார் அருகே வி.கே.கே. மேனன் ரோட்டின் வடக்கே சி.எம்.சி. காலனி உள்ளது. நேற்று மாலை இப்பகுதியை சேர்ந்த மக்கள் பட்டா வழங்கக்கோரி அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ் ஸ்டாண்ட் எதிரே கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர். அப்பகுதி மக்கள்கூறுகையில்,'மூன்று தலைமுறைகளாக இங்கு வசிக்கிறோம். இங்கு 140 வீடுகள் இருந்த நிலையில் 40 குடும்பங்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கட்டடத்தில் குடியிருப்பு ஒதுக்கப்பட்டது. ரோட்டின் வடக்கே உள்ள, 22 குடியிருப்புகளுக்கு பட்டா கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். வழக்கு நிலுவையில் இருக்கும்போது, மாநகராட்சி அலுவலர்கள் வீடுகளை ஒரு மாதத்துக்குள் காலி செய்யுமாறு நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர். எங்களுக்கு பட்டா வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.