-நமது நிருபர்-கடந்த ஆண்டில் துாய்மை நகரங்கள் பட்டியலில் 42வது இடத்தில் இருந்த கோவை, இப்போது 182 வது இடத்துக்குச் சென்றிருப்பது, கோவை மாநகராட்சியில் குப்பை மேலாண்மையில் கோடிக்கணக்கில், ஊழல் நடப்பதை உறுதி செய்துள்ளது.கோவை நகரம், தொழில் வளர்ச்சியில் சர்வதேச அளவில் அடையாளம் பெற்ற நகரமாக வளர்ந்து வருகிறது. தேசிய அளவில் வேகமாக வளரும் நகரங்களில், கோவை முன்னணி இடத்தில் உள்ளது.ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி மற்றும் அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் கோவை, தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உருவெடுத்துள்ளது.வருவாய் அடிப்படையில் மட்டுமின்றி, பரப்பளவு, மக்கள் தொகை என பல விதங்களிலும் வளர்ந்து வரும் கோவை நகரில், கடந்த சில ஆண்டுகளாக கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், குளங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், குளங்கள், கால்வாய்கள், ரோட்டோரங்கள் என எட்டுத் திக்கிலும் எங்கு எட்டு வைத்தாலும் குப்பைகள் திட்டுத் திட்டாக குவிந்து கிடப்பதைப் பார்க்க முடிகிறது.இதனால் தான், கடந்த 2022ல் துாய்மை நகரங்கள் பட்டியலில் 42வது இடத்தில் இருந்த கோவை மாநகராட்சி, கடந்த ஆண்டில் 182வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலில் முதல் 100 நகரங்களில், தமிழகத்தில் ஒரு நகரமும் இல்லை என்பது அவமானம் என்றால், முதல் 50 இடங்களுக்குள் இருந்த கோவை, 140 இடங்கள் பின் தங்கியுள்ளது பெரும் கேவலமாகக் கருதப்படுகிறது.இது, கோவை நகரில் பன்னாட்டு நிறுவனங்கள் கால் பதிக்கவும் யோசிக்கின்ற ஒரு நிலையை ஏற்படுத்தும். ஆனால் இதைப் பற்றி, தமிழக முதல்வர், துறை அமைச்சர், கோவை மாநகராட்சியின் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் என யாருமே துளியும் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை.அப்படி வருத்தப்பட்டிருந்தால், இந்த பட்டியல் வந்தவுடனே, உடனடியாக இதுபற்றி ஆய்வு செய்து, திடக்கழிவு மேலாண்மையில் நடக்கும் குளறுபடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு முயற்சி செய்திருப்பார்கள். இப்போது வரையிலும் இதற்காக எந்தவொரு கூட்டமும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.2022லும், வெள்ளலுார் குப்பைக் கிடங்கு பிரச்னை பெரிதாகத்தான் இருந்தது. ஆனால் அப்போது இப்போதுள்ள அளவுக்கு, வீதிகளிலும், ரோடுகளிலும் குப்பை மலை மலையாகக் குவிந்து கிடக்கவில்லை. இதற்கு மொத்தமாக அகற்றப்பட்ட குப்பைத் தொட்டிகளும் காரணம்.முன்பு, குப்பைத் தொட்டிகளில் மக்கள் குப்பை போடுவதை, வாரமிரு முறை அள்ளிக் கொண்டு சென்றதால், வெளியில் குப்பை தெரிவது குறைவாயிருந்தது.இப்போது வீடு வீடாகவும், கடை கடையாகவும் குப்பை சேகரிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, மொத்தமாக குப்பைத் தொட்டிகளை அகற்றி விட்டனர். ஆனால் குப்பை சேகரிப்பு, அன்றாடம் நடப்பதேயில்லை.அந்தளவுக்கு துாய்மைப் பணியாளர்களும் இல்லை. மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளிலும், துாய்மைப் பணி, தனியாருக்கு விட்டபின்பு, குப்பை சேகரிப்புப் பணி, மிக மோசமாகியுள்ளது.துாய்மைப் பணியாளர், வாகனங்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டது.இதே நிலை நீடித்தால், கோவை மாநகராட்சி என்றாலே, குப்பை நகரம் என்பதே இனி அடையாளமாகும்!கடந்த 2022ல் துாய்மை நகரங்கள் பட்டியலில் 42வது இடத்தில் இருந்த கோவை மாநகராட்சி, கடந்த ஆண்டில் 182வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் 100 நகரங்களில், தமிழகத்தில் ஒரு நகரமும் இல்லை என்பது அவமானம் என்றால், முதல் 50 இடங்களுக்குள் இருந்த கோவை, 140 இடங்கள் பின் தங்கியுள்ளது பெரும் கேவலமாகக் கருதப்படுகிறது. இது, கோவை நகரில் பன்னாட்டு நிறுவனங்கள் கால் பதிக்கவும் யோசிக்கின்ற ஒரு நிலையை ஏற்படுத்தும்.