பத்திரிகையாளர்கள் பெயரில் வசூல்; கலெக்டரிடம் புகார்
கோவை; 'பத்திரிக்கையாளர்கள் பெயரில் செயல்படும், சில போலி நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, எல்.பி.எப். - சி.ஐ.டி.யு. - டி.டி.பி.டி.எஸ். உள்ளிட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர், கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். கூட்டு நடவடிக்கை குழுவினர் கொடுத்த மனு: பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் வரும் சிலர், டாஸ்மாக் ஊழியர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டுவது அதிகரித்துள்ளது. சில ஜாதி அமைப்பு நிர்வாகிகள் நிகழ்ச்சிகளுக்கு நன்கொடை கேட்பதும், தராதபோது ஊழியர்கள் மீது, போலீஸ் ஸ்டேஷன்களில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், பொய் புகார் அளித்து மிரட்டுவதும் அதிகரித்துள்ளது. இச்சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்தவும், டாஸ்மாக் ஊழியர்களை பாதுகாக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.