கைதானவர்களை இரவில் ஸ்டேஷன்களில் வைக்காதீர்; போலீசாருக்கு கமிஷனர் உத்தரவு
கோவை; கோவை மாநகரில் கைது செய்யப்பட்டவர்களை இரவு 7:00 மணிக்கு மேல், போலீஸ் ஸ்டேஷனில் வைக்கக்கூடாது என, மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், கோவில் காவலாளி அஜித்குமாரை போலீசார் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில், ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டனர்.கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், 24 பேர் காவல் நிலையங்களில் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இது போன்ற கஸ்டடி மரணங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.விசாரணை என்ற பெயரில் கண்மூடித்தனமாகவும், கொடூரமாகவும் போலீசார் தாக்குவதால், இந்த உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.இந்நிலையில், கோவை மாநகர பகுதிகளில் உள்ள, போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை் கைது செய்தால், அவர்களை இரவு 7:00 மணிக்கு மேல் ஸ்டேஷனில் வைத்திருக்க கூடாது என, போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார்.குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விசாரிக்க கால தாமதம் ஆனாலும், அன்றே அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக, போலீஸ் கமிஷனர் சரவண சுந்தரிடம் கேட்டபோது, '' கைது செய்யப்பட்ட நபர்களை, இரவு 7:00 மணிக்கு மேல் ஸ்டேஷன்களில் வைக்க கூடாது என்ற நடைமுறை ஏற்கனவே பின்பற்றப்பட்டு வருகிறது. ''எனினும், திருப்புவனம் சம்பவத்தை கருத்தில் கொண்டு, இந்த நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.