மேலும் செய்திகள்
'இ-பைலிங்' நடைமுறை வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்
09-Dec-2025
கோவை: நீதிமன்றங்களில், இ-பைலிங் முறையை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட வக்கீல் சங்க கூட்டுக்குழு அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நேரடியாக வழக்கு தாக்கல் முறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த முறை மாற்றப்பட்டு, அனைத்து நீதிமன்றங்களில், இ-பைலிங் என்ற மின்னணு வழக்கு தாக்கல் முறை டிச., 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்பு, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்க (ஜேக்) நிர்வாகிகள் மற்றும் எதிர்ப்பு போராட்ட குழு சார்பில் நடந்த அவசர கூட்டத்தில், இ-பைலிங் முறையை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் கூறியதாவது: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், இ--பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், டிச., 1 முதல், கட்டாயமாக்கிய சுற்றறிக்கையினை சென்னை ஐகோர்ட் நிறுத்தி வைத்து, முழுமையாக திரும்பபெற வேண்டும். வக்கீல்கள் மற்றும் வழக்காடிகள் தாக்கல் செய்யும் வழக்குகளை கோப்புக்கு எடுத்த பின்பு, நீதிமன்றமே ஸ்கேனிங் செய்து இணையத்தில் பதிவேற்றி கொள்ள வேண்டும். இக்கோரிக்கை முன் வைத்து, கடந்த 5ம் தேதி முதல் நடைபெற்று வரும் காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் தொடரும். மேலும், 15ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு, அனைத்து நீதிமன்ற வாயில் முன்பாக இ - பைலிங் தொடர்பான சுற்றறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும். 16ம் தேதி, நீதிமன்ற அருகாமையில் உள்ள தபால் நிலையங்களுக்கு ஊர்வலமாக சென்று, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கு, பதிவு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெறும். 17 ம் தேதி கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம், 18 மற்றும் 19ம் தேதி அறவழிப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு நந்தகுமார் தெரிவித்தார்.
09-Dec-2025