உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஒப்பந்த லாரி டிரைவர்கள் காத்திருப்பு போராட்டம் மாற்று டிரைவர்கள் நியமித்து லாரிகள் இயக்கம்

 ஒப்பந்த லாரி டிரைவர்கள் காத்திருப்பு போராட்டம் மாற்று டிரைவர்கள் நியமித்து லாரிகள் இயக்கம்

கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பையை எடுத்துச் செல்வதற்கு ஒப்பந்த முறையில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடுகின்றன. டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் ஒப்பந்த முறையில், ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணிபுரிகின்றனர். கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் குப்பை லாரி ஓட்டிய டிரைவர்களில் நான்கு பேர் ஒழுங்கீனமாக செயல்பட்டதாக கூறி, அவர்களை, ஒப்பந்த நிறுவனம் பணியில் இருந்து நீக்கியது. அவர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென கூறி, அந்த மண்டலத்துக்கு உட்பட்ட ஒப்பந்த டிரைவர்கள், மண்டல அலுவலகத்தை கடந்த மாதம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சு நடத்தி, சமரசம் செய்தனர். அதன் பிறகும் அவர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அதனால், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். சமூக நீதி அமைப்பு சாரா பொது பணியாளர்கள் சங்கம் சார்பில் நடந்த இப்போராட்டத்தில் 60 டிரைவர்கள் பங்கேற்றனர். சங்க பிரதிநிதிகளிடம், மாநகராட்சி துணை கமிஷனர் குமரேசன் பேச்சு நடத்தினார். அப்போது, 'முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை தர உள்ளார். அவர் வந்து சென்றபின், பேசிக் கொள்ளலாம்' என, கூறப்பட்டது. அதை ஏற்றுக் கொள்ளாமல் கலைந்து சென்ற லாரி டிரைவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் இன்று (18ம் தேதி) காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'இது, ஒப்பந்த லாரி நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர்கள் பிரச்னை. ஒப்பந்த நிறுவனமும், டிரைவர்களும் பேசி தீர்வு காண வேண்டும். எக்காரணம் கொண்டும் குப்பை எடுத்துச் செல்லாமல் லாரிகள் நிற்கக் கூடாது என்பதால், மாற்று டிரைவர்கள் நியமித்து இயக்கப்பட்டன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்