உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்ஜெட் புத்தகம் தயாரித்து விட்டு ஆலோசனைகள் கேட்ட மாநகராட்சி; மண்டல தலைவர்கள் பாய்ச்சல்

பட்ஜெட் புத்தகம் தயாரித்து விட்டு ஆலோசனைகள் கேட்ட மாநகராட்சி; மண்டல தலைவர்கள் பாய்ச்சல்

கோவை; கோவை மாநகராட்சியின், 2025-26ம் நிதியாண்டுக்கான வரவு - செலவு திட்ட அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யும் கூட்டம், 28ம் தேதி மதியம், 12:00 மணிக்கு விக்டோரியா ஹாலில் நடக்கிறது. இதுதொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது; மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார்.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்க மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்களோடு, ஆளுங்கட்சி தலைவருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மற்ற கட்சி கவுன்சில் குழு தலைவர்களை அழைக்கவில்லை.மண்டல தலைவர்கள் சிலர் பேசியதாவது:பட்ஜெட் புத்தகம் ஏற்கனவே தயாரித்து விட்டு, இப்போது ஆலோசனை கூட்டம் நடத்துவது ஏன். மற்ற கட்சிகளின் கவுன்சில் குழு தலைவர்களை, ஆலோசனை கூட்டத்துக்கு அழைக்காதது ஏன்?சுகாதாரம், குடிநீர், தெருவிளக்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இம்மூன்று அடிப்படை வசதிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை குழாய்களை மாற்றுங்கள்.அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் பொங்குவதை தவிர்க்க, 'மேனுவல்' பகுதியை உயர்த்துங்கள். அதன்பின், வீட்டு இணைப்பு வழங்குங்கள். குறுகலான சந்துகளில் கான்கிரீட் சாலை போடுங்கள்; 'பேவர் பிளாக்' ரோடு வேண்டாம். வெள்ளலுாருக்கு காய்கறி மார்க்கெட் கொண்டு செல்வது சரியல்ல.பாதாள சாக்கடை திட்டத்தை, உடனடியாக செயல்படுத்த வேண்டும். உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். மண்டலத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். மாநகராட்சி பழைய கட்டடங்களை, புதுப்பிக்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகளுக்காக பூங்கா உருவாக்க வேண்டும். தானமாக கொடுக்கும் நிலத்தை பெற்று, திட்டச்சாலைகள் உருவாக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.

'மகளிருக்காக பிங்க் பூங்கா'

மேயரிடம் கேட்டபோது, ''மகளிர், குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தும் வகையில், 'பிங்க் பூங்கா' உருவாக்க இருக்கிறோம்; மண்டலத்துக்கு ஒன்று வீதம் ஐந்து பூங்காக்கள் அமைக்க உள்ளோம். மழை நீர் வடிகால் கட்ட வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும். நடுநிலைப்பள்ளி களை தரம் உயர்த்த வேண்டும்.திட்டச்சாலைகள் அமைக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளோம். மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு வருவோருக்கு, புற்றுநோய் பரிசோதனை செய்ய ஆலோசிக்கப்பட்டது; அதற்கான உபகரணங்கள் வாங்க தொகை அதிகமாக தேவைப்படும் என்பதால், மாதத்துக்கு ஒரு நாள் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ய, நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை