மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் போராட்டம்
கோவை; கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், தங்களுக்கு முழுமையான சம்பளம் வழங்க கோரி, கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று நகரில் குப்பை அள்ளப்படாததால், பல வீதிகள் குப்பைக்கூளமாக காட்சியளித்தது.கோவை மாநகராட்சியில், துாய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்குவதை ரத்து செய்து விட்டு, மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, நுாற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள், கோவை கலெக்டர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசாணை 62-ன் படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், துாய்மை பணியாளர்களிடம் மாதா, மாதம் பிடித்தம் செய்யப்படும் சம்பளத்துக்கான, ரசீதை வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ., மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.மாவட்ட நிர்வாகம் நாளொன்றுக்கு, ரூ.770 சம்பளம் வழங்க அறிவுறுத்திய சூழலில், மாநகராட்சி நிர்வாகம், 540 ரூபாய் மட்டுமே வழங்கி வருகிறது.கோவை கலெக்டர், மாநகராட்சி நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி, உரிய தீர்வு காண வேண்டும்; தவறும் பட்சத்தில் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
மறுத்தால் போராட்டம்'
தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் துப்புரவு தொழிலாளர் சங்க பொதுசெயலாளர் செல்வம் கூறியதாவது:கடந்த ஏழாண்டில், 11 போராட்டங்கள் நடத்தி விட்டோம். நான்கு சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. ஆனாலும் மாநகராட்சி நிர்வாகம், பழைய நடைமுறையில் பாதி சம்பளத்தையே வழங்குகிறது. மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில், 5,668 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு சேர வேண்டிய சம்பளத்தை, முழுமையாக வழங்க வேண்டும். தவறினால் போராட்டம் தொடரும். இவ்வாறு, அவர் கூறினார்.