துாய்மை பணியாளர் தினக்கூலி பிரச்னை; தொழிலாளர் நலத்துறையில் இன்று பேச்சு
கோவை; கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை, தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் இன்று (25ம் தேதி) பிற்பகல், 3:00 மணிக்கு நடக்கிறது.கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், குடிநீர் வினியோக பணியாளர்களுக்கு, கலெக்டர் நிர்ணயித்த தினக்கூலி ரூ.770 வழங்க வேண்டுமென அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாநகராட்சியில் நடந்த பேச்சுவார்த்தையில், மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், 680 ரூபாய் வீதம், மாதந்தோறும் ரூ.20,454 மட்டுமே வழங்க முடியும் என, நிர்வாகத் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. சில தொழிற்சங்கத்தினர் ஏற்றுக் கொண்டு, போராட்டத்தை கைவிட்டனர். கூட்டமைப்பை சேர்ந்த ஆறு தொழிற்சங்கத்தினர் ஏற்கவில்லை.கோரிக்கை தொடர்பாக, தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிற்சங்கத்தினர் முறையிட்டனர். அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, இன்று (25ம் தேதி) பிற்பகல், 3:00 மணிக்கு, கோவையில் உள்ள தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.