உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிக எடையுள்ள புத்தகப்பையால் ஆபத்து; லாக் அண்டு கீ நடைமுறைக்கு பரிந்துரை

அதிக எடையுள்ள புத்தகப்பையால் ஆபத்து; லாக் அண்டு கீ நடைமுறைக்கு பரிந்துரை

கோவை; பள்ளி மாணவர்கள் அதிக எடையுடன் புத்தகப்பை தினந்தோறும் சுமந்து செல்வது, முதுகு தண்டுவடத்தை பாதிக்கும் என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் மன அழுத்தம் குறைக்கவும், புத்தகப்பையின் எடையை குறைக்கும் வகையிலும், 2011ல் முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், தற்போதும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் புத்தகப்பை சுமையால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்1 மாணவன் ஒருவர் பள்ளி வகுப்பறையிலேயே மயங்கி இறந்தார். இச்சம்பவம் பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இம்மாணவனின் இறப்புக்கு, காலை உணவு இன்றி, அதிக எடையுடைய புத்தகப்பையுடன், நான்கு மாடி அவசரநிலையில் ஏறிச்சென்றதே காரணம் என, உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பல பள்ளிகளில் அதிக எடையுடன், புத்தகப்பையை மாணவர்கள் சிரமத்துடன் சுமந்து செல்வதை, தினந்தோறும் காணமுடிகிறது. இதனால், சிறு வயது முதலே முகுது வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். தனியார் பள்ளிகள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டாலும், கூடுதலாக பல்வேறு புத்தகங்கள் மாணவர்களுக்கு திறன் சார்ந்து, பள்ளி சார்பில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, கோவை அரசு மருத்துவமனை எலும்பியல் பிரிவு இயக்குனர் டாக்டர் வெற்றிவேல் செழியன் கூறுகையில், ''பள்ளிகளில் புத்தகங்களை வைத்து பூட்டிவைத்துவிட்டு, வெறும் கையுடன் வீட்டுக்கு செல்லும், 'லாக் அண்டு கீ' நடைமுறை, பிற நாடுகளை போன்று அமல்படுத்த வேண்டும். சிறு வயது முதல் அதிக எடையுடைய புத்தகப்பையை துாக்கி செல்வதால், முதுகுதண்டுவடத்தில் பிரச்னை ஏற்படுகிறது. சிறிய வயதிலேயே முதுகு வலி உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படுவதை காணமுடிகிறது, '' என்றார். விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்1 மாணவன் ஒருவர் பள்ளி வகுப்பறையிலேயே மயங்கி இறந்தார். மாணவனின் இறப்புக்கு, காலை உணவு இன்றி, அதிக எடையுடைய புத்தகப்பையுடன், நான்கு மாடி அவசரநிலையில் ஏறிச்சென்றதே காரணம் என, உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 'காலை உணவு கட்டாயம்' கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல துறைத்தலைவர் டாக்டர் சசிக்குமார் கூறுகையில், ''விழுப்புரம் மாணவன் இறப்புக்கு, காரணம் தெரியவில்லை. ஆனால், பள்ளி மாணவர்கள் காலை உணவை எப்போதும் தவிர்க்கக் கூடாது. 10 மணி நேர இடைவேளைக்கு பின் காலை உணவு, மூளைக்கு ஆற்றலை தருகிறது. உணவு எடுக்கவில்லை என்றால் சோர்வு ஏற்படும். பாடங்களை கவனிக்க இயலாது. தற்போதைய சவால்கள் நிறைந்த கல்வி முறையில், மாணவர்கள் அதிகம் படிக்கவேண்டியுள்ளது. முடிந்த வரை, புத்தகங்களை டேபிள் அடியில் பூட்டி வைத்துவிட்டு, தேவையானவற்றை மட்டும் எடுத்துச்செல்லும் நடைமுறை வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி