ஆபத்தான துணை அஞ்சலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
வால்பாறை; இடிந்து விழும் நிலையில் உள்ள துணை அஞ்சலகத்தை, அதிகாரிகள் சீரமைக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை அடுத்துள்ள கருமலை பஜாரில், கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக துணை அஞ்சலகம் செயல்படுகிறது. மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்ட நிலையில், கட்டடம் மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறது. பாதுகாப்பு இல்லாத பாழடைந்த மண்டபத்தில் துணை அஞ்சலகம் செயல்படுகிறது. இதனால் இங்கு பணிபுரியும் அதிகாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. அதிகாரிகள் கூறியதாவது: கருமலையில் செயல்படும் துணை அஞ்சலகத்தில் அதிகளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சுற்று வட்டாரப்பகுதியில் வங்கிகள் எதுவும் இல்லாத நிலையில், தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேமிப்பு கணக்கு துவங்கியுள்ளனர். இது தவிர, தங்கமகள் சேமிப்பு திட்டம், டெபாசிட் தொகைகளையும் அஞ்சலகத்தில் சேமித்துள்ளனர். இடிந்து விழும் நிலையில் உள்ள அஞ்சலகத்தில் இரவு நேரத்தில் சிறுத்தையும், பகல் நேரத்தில் பாம்புகளும் காணப்படுகின்றன. எனவே, பழமையான இந்த கட்டடத்தை அஞ்சலக ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி சீரமைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.