உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டெங்கு காய்ச்சல் பாதிப்பில்லை; சுகாதாரத்துறையினர் தகவல்

டெங்கு காய்ச்சல் பாதிப்பில்லை; சுகாதாரத்துறையினர் தகவல்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், 'டெங்கு', 'ப்ளூ' காய்ச்சல் பாதிப்பு இல்லை, என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.பொள்ளாச்சி நகரில், பருவநிலை மாற்றம், திட்டமிடப்படாத திடக்கழிவு மேலாண்மை காரணமாக, கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், வழக்கமான நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.காய்ச்சல் அறிகுறிகளுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு வருவோர் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என, உள்ளாட்சி அமைப்புகள்தோறும், கொசு ஓழிப்பு நடவடிக்கை, குடிநீரில் குளோரின் கலப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில்,தற்போது வரை, டெங்கு, ப்ளூ உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு இல்லை. வழக்கமான எண்ணிக்கை அடிப்படையிலேயே காய்ச்சல் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.சுகாதாரத்துறையினர் கூறியதாவது:மழை பெய்யும் போது, வீட்டைச் சுற்றிலும் உள்ள டயர்கள், தேங்காய் சிரட்டைகள், உடைந்த பாத்திரங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கும். அப்போது, டெங்குவை பரப்பும் ஏ.டி.எஸ்., வகை கொசுக்கள் தேங்கும் நீரில் முட்டையிட்டு இன பெருக்கமடையும். இதனால், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும்.அதனால், கொசு உற்பத்தியை தடுக்க, வீட்டைச் சுற்றி நீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். பாத்திரங்கள், டயர்கள், தொட்டிகளில் தண்ணீர் சேமித்து வைப்பதை தவிர்ப்பது, கொசு வலைகள் பயன்படுத்துவது, ஜன்னல், கதவுகளில் கொசு வலை போடுவது, பகல் நேரங்களில் பூச்சியை விரட்டும் கிரீம்கள், தெளிப்பான்களை பயன்படுத்தலாம்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை