தினமலர்-பட்டம் மெகா வினாடி-வினா போட்டி; உடனுக்குடன் பதிலளித்த மாணவ, மாணவியர்
கோவை : 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நேற்று நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டியில் மாணவ, மாணவியர் உடனுக்குடன் பதிலளித்து அசத்தினர்.'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில் மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தும் விதத்திலும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தவும் கடந்த, 2018 முதல் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்படுகிறது.இந்தாண்டுக்கான 'வினாடி வினா விருது, 2024-25' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் கடந்த, 8ம் தேதி கோவைப்புதுார், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது.இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜன்சிஸ் உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி இடம்பெறுகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அரையிறுதி போட்டி நடக்கும்.இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. நேற்று சத்தி ரோடு, கணேசபுரத்தில் உள்ள ஸ்ரீ பாரதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் போட்டி நடந்தது.தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வில், 50 பேர் பங்கேற்றனர்.இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'டி' அணியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஆதித்யா, எட்டாம் வகுப்பு மாணவர் அகில் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்ரீ பாரதி மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளாளர் பாக்கியம் பரிசு வழங்கினார். வினாடி-வினா ஒருங்கிணைப்பாளர் ரேவதி, கணித ஆசிரியை ஹரிபிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.