கலைஞர்களுக்கு அவமரியாதை; முதல்வருக்கு பறந்தது புகார்
பொள்ளாச்சி; கோவை மாவட்ட நாடக கலைக்கழக நிறுவனர் நெகமம் சண்முகவடிவேல், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.மனுவில் கூறியிருப்பதாவது: நலிவுற்ற நாடகம் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு, கோவை அரசு பொருட்காட்சியில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், நடிப்பு கலைஞர்களுக்கான ஊதியத்தொகையை, மூவாயிரத்தில் இருந்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.நடிப்பு கலைஞர்களின் குடும்ப பெண்களுக்கு, மகளிர் உரிமைத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டது. கலை நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல பஸ் பாஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ காப்பீட்டு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, கோவை அரசு பொருட்காட்சியில் முதல்வருக்கு நன்றி கூறும் வகையில் விழா நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டது. ஆனால், விழா மேடையில் இருக்கை வசதிகள் மற்றும் மைக் யூனிட் வசதி ஏற்படுத்தி கொடுக்காமல், பொருட்காட்சி அலுவலர் நடிப்பு கலைஞர்களை அவமரியாதை செய்தார். அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.