தி.மு.க., வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்
கோவை; தமிழகத்தில் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 14 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றும் 12 ஆயிரம் ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியிருப்பதாவது: கடந்த தேர்தலில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில், பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதாக, இன்றைய தமிழக முதல்வர் தெரிவித்தார். நான்கு ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை.12 ஆயிரத்து 500- ரூபாய் தொகுப்பூதியத்தில், ஆசிரியர்களின் குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன. ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், இதை அரசு கொள்கை முடிவாக எடுத்து, 110 விதியின் கீழ், பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பை வெளியிட்டு, தி.மு.க., வின் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.