கோவை;கால்நடைகளுக்கு பொங்கலை அளவுக்கு அதிகமாக உணவளித்தால், உயிரிழப்புகூட ஏற்படும் வாய்ப்புள்ளதாக. கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.தமிழகம் முழுவதும், இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. விவசாயத்துக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு உணவளிப்பது வழக்கம்.மேலும், அதிகாலையிலேயே கால்நடைகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி அலங்கரித்து மேய்ச்சலுக்கு விவசாயிகள் அனுப்புவர். தொடர்ந்து, மாட்டு கொட்டகையில் பட்டி பெருக பொங்கல் இடுவர்.பொங்கல், அரிசி, கரும்பு, பழ வகைகளை ஒரு நாள் கவனிப்பு என்ற பெயரில், இஷ்டத்துக்கு கால்நடைகளுக்கு உணவாக தரப்படுகிறது.இதனால், வயிற்று உப்புசம், நரம்பு மண்டல பாதிப்பு ஏற்பட்டு இறுதியில் உயிரிழப்புகூட ஏற்படும் வாய்ப்புள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை எச்சரித்துள்ளது.கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:மாட்டு பொங்கல் அன்று வழக்கமாக கரும்பு, பொங்கல், அரிசி, வடை உள்ளிட்டவற்றை ஆடு, மாடுகளுக்கு விவசாயிகள் வழங்குகின்றனர். கரும்பில் சர்க்கரை அதிகம் உள்ளதால், அதை சாப்பிடும் கால்நடைகள் இரு நாட்கள் மந்தமாகவே இருக்கும்.முழு கரும்பாக தராமல், சக்கையாக சாப்பிடுவதற்கு வழங்கலாம். பொங்கல், அரிசி உள்ளிட்டவற்றை ஒரு கையளவு உருண்டை தரலாம். அதிகமாக சாப்பிட்டால் கால்நடைகளின் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்து, நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.வயிறு உப்புசம் ஏற்பட்டு, உயிரிழப்பு கூட ஏற்படலாம். சிலர் மீதமிருக்கும் பொங்கல் உள்ளிட்ட உணவு பொருட்களை ,மறுநாளும் வழங்குவதுண்டு.கிலோ கணக்கில் சாப்பிடுவதால், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் அதை தவிர்க்க வேண்டும். பழ வகைகளால் எந்த பாதிப்பும் இருக்காது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
முதலுதவி என்ன?
மாடுகள் அதிகளவு பொங்கல் உட்கொண்டு, வயிறு உப்புசம் ஏற்பட்டால், 15 கிராம் பெருங்காயத்தை அரை லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீரில் கரைத்து தரலாம். அல்லது 100-150 கிராம் சமையல் சோடாவில் சிறிதளவு தண்ணீர் தெளித்து ஊட்ட வேண்டும். கால்நடைகளின் நிலைமை மோசமாகும் வரை காத்திருக்காது உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.