மேலும் செய்திகள்
94 மருந்துகள் தரமற்றவை: மத்திய அரசு அறிவிப்பு
23-Sep-2025
கோவை:'காலாவதியான மருந்துகள் மற்றும் மருந்து கழிவுகளை திறந்தவெளியில் கொட்டக்கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கோவை அருகே சமீபத்தில் வடவள்ளி, தொண்டாமுத்துார் பகுதிகளில் காலாவதியான மருந்துகள் திறந்தவெளியில் கொட்டப்பட்டதால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. உரிய அறிவுறுத்தல்களை மருந்துகளை கையாளும் நிறுவனங்களுக்கு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோவை மண்டல மருந்து தரக்கட்டுப்பாட்டு துறை சார்பில், மருந்து மொத்த வியாபாரம் செய்வோருக்கு அறிவுறுத்தல் கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில், 'மருந்தகங்கள் மற்றும் மருந்து விற்பனையாளர்கள், மத்திய மருந்து தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி, காலாவதியான மற்றும் பயன்படுத்தாத மருந்துகளை சரியான முறையில் அகற்ற வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டது. கோவை மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது: திறந்தவெளியில் மருந்து கழிவுகள், காலாவதியான மருந்துகளை கொட்டுவதால் சுற்றுப்புற சூழல் பாதிப்பதோடு, பல்வேறு உயிரினங்களும் பாதிக்கும். காலாவதியான மருந்துகளை விற்பனை செய்வதும், அத்தேதிக்குபின் வைத்திருப்பதும் கூடாது. மருந்து தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி, காலாவதியான மருந்துகள் தயாரிப்பு நிறுவனத்திடமே 30 நாட்களுக்குள் திருப்பி அனுப்ப வேண்டும். உற்பத்தியாளர்களை தவிர, வேறு யாருக்கும் மருந்துகளை அழிக்கும் உரிமை இல்லை. அனைத்து சில்லரை, மொத்த விற்பனையாளர்களும் காலாவதியான மருந்துகள், மருந்து கழிவுகளை கையாள்வதில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மீறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
23-Sep-2025