வால்பாறை செல்ல நாளை முதல் இ-பாஸ் நடைமுறை: கலெக்டர்
வால்பாறை: வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணியர் நாளை (நவ. 1ம் தேதி) முதல் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும், என, கோவை கலெக்டர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் அறிக்கை: சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின் படி, கோவை மாவட்டம், வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணியருக்கு நவ. 1ம் தேதி முதல் இ- பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வால்பாறைக்கு சுற்றுலா செல்லும் அனைத்து வாகனங்களும், ஆழியாறு மற்றும் தமிழக - கேரள எல்லையில் உள்ள சோலையாறு அணை (இடதுகரை) வனத்துறை சோதனை சாவடிகளில், இ-பாஸ் பெறலாம். வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணியர் தமிழ்நாடு அரசின் அதிகார பூர்வமான இணைய தளத்தில் https://WWW.tnepass.in.tn.gov.inபெயர் மற்றும் இதர விபரங்களை பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம். மேலும், வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணியர் எக்காரணத்தை கொண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது. சுற்றுலா பயணியர் இ-பாஸ் பெற்று வருவதை கண்காணிக்க, வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை, காவல்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இரண்டு சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். இது தவிர, வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து வாகனங்களும் (இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்) மற்றும் சுற்றுலா வாகனங்கள் இணையதளத்தில் ஒரு முறை மட்டும் பதிவு செய்தால் போதும், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வால்பாறைக்கு சென்று வரலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.