கிழக்கு புறவழிச்சாலை திட்டம்: விவசாயிகள் எதிர்ப்பு
சூலுார்; கிழக்கு புறவழிச்சாலை திட்டத்துக்கு எதிராக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். கோவை மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள திருச்சி ரோடு, அவிநாசி ரோட்டை, சத்தி ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ரோட்டுடன் இணைக்கும் வகையில் கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 81 கி.மீ. துாரத்துக்கு ரோடு அமைக்க பல கிராமங்களில் 'மார்க்கிங்' செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கோவை கிழக்கு புறவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம், வாகராயம்பாளையத்தில் நேற்று நடந்தது. கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டது. இயக்க ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறியதாவது: விளை நிலங்களே விவசாயிகளின் உயிர் நாடி. அதை அழித்து புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதனால், புதிய திட்டத்தை கைவிட வலியுறுத்தி வருகிறோம். ஏற்கனவே இரு வழிச்சாலைகளாக உள்ள ரோடுகளை, நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும். நெருக்கடி உள்ள பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டலாம். இந்த கருத்தை வலியுறுத்தியும், புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளோம். திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்களை ஒருங்கிணைத்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார். கூட்டத்தில், துளிர் மோகன், சந்திரசேகர், சத்தியமூர்த்தி, கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.