அறநிலையத்துறை கமிஷனர் ஆபீஸ்; இரண்டாக பிரிக்க வலியுறுத்தல்!
- நமது நிருபர் -அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தை இரண்டாகப் பிரித்து, மதுரையில் புதிய கமிஷனர் அலுவலகம் அமைக்க வேண்டும் என, கோவில் பூசாரிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அதன் மாநில தலைவர் வாசு கூறியிருப்பதாவது:தமிழகம் முழுவதும், ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. கோவில்களையும், கோவில் சொத்துக்களையும் அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது.இதற்காக, அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் இணை, துணை கமிஷனர்கள், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர்.முக்கிய பணிகள் உத்தரவுகள், கோரிக்கைகள் உள்ளிட்டவற்றுக்காக, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட, பொதுமக்களும் சென்னையில் உள்ள அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தை நாட வேண்டி உள்ளது.சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல், நீண்ட துாரம் ஆகியவற்றுக்கு இடையே, அங்கு சென்று கமிஷனரை சந்திப்பது மிகவும் சிரமமாக உள்ளது.சென்னை ஐகோர்ட் எவ்வாறு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மதுரையில் ஐகோர்ட் செயல்படுகிறதோ, அதேபோல், அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மதுரையிலும் புதிய கமிஷனர் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்.இதனால், தேவையற்ற அலைச்சல், வீண் விரயம் தவிர்க்கப்படும். அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, குறைகளை தெரிவிக்க வரும் பொதுமக்களும் எளிதாக தொடர்பு கொள்ள முடியும்.எனவே, சட்ட விதிகளில் மாற்றம் கொண்டு வந்து, மதுரையில் புதிய கமிஷனர் அலுவலகம் அமைக்க தமிழக அரசு, ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.