கோவை; ''நொய்யல் ஆற்றை பாதுகாக்க, பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் தெரிவித்தார்.கோவை, ஆத்துப்பாலம் பகுதியில், நொய்யல் ஆறு செல்லும் பகுதியை பார்வையிட்டு, அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம், பிரச்னையை கேட்டறிந்தார். ஒவ்வொரு கட்சியினரும், அரசு அதிகாரிகளும் பலமுறை இங்கு வந்து பார்வையிட்டுச் செல்வதாகவும், நடவடிக்கை இல்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.பின், பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:நொய்யல் ஆறே, கோவை நகரின் அழகாக இருக்கிறது. 300 அடி அகலம் கொண்டிருந்த இந்த ஆறு, தற்போது 50 அடி அகலம் கொண்ட கழிவு நீர் கால்வாயாக மாறியிருக்கிறது. ஆற்றில், கழிவு நீர் கலப்பதை தடுக்க, சிறப்பு பெருந்திட்டத்தை, தொழிலதிபர்கள் பங்களிப்புடன், தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.அரசு, பெருநிறுவனங்களுடன் இணைந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்கக்கோரி, கோவை மக்கள் பங்களிப்போடு விரைவில் போராட்டம் நடத்தப்படும். நாளை (இன்று), தமிழக விவசாயிகள் மகாசபை கூட்டம், பேரூரில் நடக்கிறது; அதில், போராட்டம் நடத்துவதற்கான முடிவுகளை எடுக்க இருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாபு, சமூக ஆர்வலர் சிதம்பரம் உட்பட பலர் பங்கேற்றனர்.