வெள்ளகோவில் விவசாயிகள் போராட்டம்; பி.ஏ.பி. அலுவலகத்தில் பரபரப்பு
பொள்ளாச்சி; பி.ஏ.பி. திட்டத்தில் சமச்சீர் நீர் வினியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வெள்ளக்கோவில் விவசாயிகள், கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. பாசனத்தில் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு பாசன நீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், வெள்ளக்கோவில் விவசாயிகள், சமச்சீர் நீர் வினியோகம் வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சி பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகள், ஆண்டிபாளையம் கிளை கால்வாய் துவக்கத்தில் சமச்சீர் நீர் வினியோகம் அல்லது வெள்ளக்கோவில் கால்வாய் துவக்கத்தில், 4.8 அடி நீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து, வெள்ளக்கோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுச்சாமி கூறியதாவது: வெள்ளக்கோவில், பி.ஏ.பி. பாசனத்தின் கடைமடை பகுதியாகும். கடந்த, 30 ஆண்டுகளாக நீர் வினியோகம் சரியாக இல்லை. சமச்சீர் நீர் வினியோகம் செய்யக்கோரி போராடுகிறோம். எங்கு தண்ணீர் திருட்டு நடக்கிறது. தண்ணீர் எங்கே விற்கப்படுகிறது. எங்கு மடைமாற்றப்படுகிறது என்ற தகவல்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பருவமழை பெய்து அணைகள் நிரம்பி உபரிநீர் தொடர்ந்து வெளியேறுகிறது. இந்த சூழலில், வெள்ளக்கோவிலில் வறட்சி உள்ளது. ஆயக்கட்டில் இருந்தும் தண்ணீர் வருவதில்லை. இது குறித்து கடந்த ஜூலை மாதம், 30ம் தேதி பேச்சு நடத்துவதாக தெரிவித்தனர். ஆனால், ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்த நிலையிலும் பேச்சு நடத்தவில்லை. எங்களது கோரிக்கையை ஏற்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம். இவ்வாறு, கூறினார். அதிகாரிகளுடன் நடந்த பேச்சு தோல்வியடைந்ததால் நேற்று இரவு வரையிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.