வீடு கட்ட இலவச நிதி இலக்கு எட்டவில்லை!
கோவை; ''கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்கு, இலவசமாக நான்கு லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தில், இலக்கை எட்டாததால், எளிமைப்படுத்தும் பணி நடந்து வருகிறது,'' என, கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் கூறினார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள், வீடு கட்டுவதற்கு நான்கு லட்சம் ரூபாய் வாரியம் வாயிலாக இலவசமாக வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது; ஆண்டுக்கு, 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இத்தொகை வழங்க வேண்டும்.துரதிர்ஷ்டவசமாக இலக்கை எட்டாததால், திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து வருகிறோம். திட்டங்களை செயல்படுத்த எளிமைப்படுத்துவதற்கான மாற்றங்கள் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதற்கான முன்மொழிவு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.ஆறு மாதத்துக்குள், மாவட்டத்துக்கு குறைந்தபட்சம், 500 தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.