உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலைப்பாதையில் கவிழ்ந்த அரசு பஸ்; டிரைவர் உட்பட 49 பயணியர் காயம்

மலைப்பாதையில் கவிழ்ந்த அரசு பஸ்; டிரைவர் உட்பட 49 பயணியர் காயம்

வால்பாறை ; வால்பாறை அருகே மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த, 49 பேர் காயமடைந்தனர்.கோவை மாவட்டம் வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, திருப்பூரிலிருந்து பொள்ளாச்சி வழியாக வால்பாறைக்கு அரசு பஸ் (டி.என்.38 என். 3920) இயக்கப்பட்டது.இந்த பஸ்சில், 71 பயணியர் பயணம் செய்தனர். கவர்க்கல் 33 வது கொண்டை ஊசி வளைவு அருகே நேற்று அதிகாலை, 3:00 மணி அளவில், அதிவேகமாக வந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், 49 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த 19 பயணியர் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அரசு பஸ் டிரைவர் கணேசன்,54. பயணியர் பாலமுருகன், 45. சேகர், 25. அஜித்குமார், 50. பாத்திமா,51. சதீஸ்,42, அருனுஷ்,19, லலிதா, 52, தனலட்சுமி,43, உதயகுமார், 48. பவானீஸ்வரி, 27. சரோஜா, 70. பாலாஜி, 33. சபரிமணி, 72. முனியம்மாள், 53. திருமலைகுமார், 38. சரவணன், 70. சித்திரக்கனி, 55. பிரபு, 42 ஆகிய 19 பேருக்கும் தலை, கை, கால், முகம் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.விபத்து குறித்து வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்துக்குள்ளான புதிய பஸ்

வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தில், பழைய டப்பா பஸ்களை மாற்றும் வகையில் கடந்த வாரம், 7 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் அனைத்தும் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டன. இதில் ஒரு பஸ் தான் தற்போது விபத்துக்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !