உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்ட அரசு துவக்கப்பள்ளி

மாணவர் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்ட அரசு துவக்கப்பள்ளி

அன்னுார்; 45 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த துவக்கப்பள்ளி மாணவர் இல்லாமல் மூடிக் கிடக்கிறது. அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 75 துவக்க, 16 நடுநிலை, மூன்று உயர்நிலை, ஆறு மேல்நிலை அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் முதல் வடவள்ளி ஊராட்சியில் உள்ள முகாசி செம்சம்பட்டி துவக்க பள்ளி ஒரு மாணவர் கூட வராததால் கடந்த 15 மாதங்களாக மூடி கிடக்கிறது. இது குறித்து அந்த கிராம மக்கள் கூறிய தாவது: இங்கிருந்து 1.5 கி.மீ., தொலைவில் உள்ள தாத்தம் பாளையத்தில் துவக்க பள்ளி உள்ளது. மேற்கே அட்டவணை செம்சம்பட்டியிலும் பள்ளி உள்ளது.வடக்கே பொகலூரில் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு பெரும்பாலான விவசாயிகள் தங்கள் குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுப்ப ஆர்வம் காட்டுகின்றனர். தொழிலாளர்கள் உள்ளிட்ட சிலரது குழந்தைகள் மட்டுமே அரசு பள்ளிக்கு செல் கின்றன. இந்தப் பள்ளியில் படித்து வந்த இரண்டு குழந்தைகளின் வீடுகள் தாத்தம்பாளையத்திற்கும் முகாசி செம்சம்பட்டிக்கும் இடையில் இருந்ததால் தாத்தம்பாளையம் பள்ளிக்கு சென்று விட்டனர். மேலும் தற்போது ஐந்து முதல் பத்து வயதில் வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கையும் இந்த கிராமத்தில் குறைவாகவே உள்ளது. கல்வித்துறை முயற்சி செய்தால் இங்கிருந்து மெட்ரிக் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோரை சமாதானப்படுத்தி அந்த மாணவர்களை அரசு துவக்க பள்ளிக்கு வர வைக்கலாம். மேலும் இந்த கிராமத்தில் இருந்து அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று படித்து வரும் இரண்டு குழந்தைகளை இந்த கிராமத்திலேயே படிக்கும்படி செய்தாலும் இந்தப் பள்ளி மீண்டும் செயல்பட வாய்ப்புள்ளது. கிராம மக்கள் கடும் முயற்சி செய்து இந்த கிராமத்திற்கு பள்ளி துவங்க அனுமதி பெற்று வந்தனர். ஆனால் தற்போது 15 மாதங்களாக பள்ளி மூடி கிடக்கிறது. இவ்வாறு மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'முகாசி செம்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி நிரந்தரமாக மூடப்படவில்லை, எப்போது ஒரு மாணவர் வந்தாலும் உடனே பள்ளி திறக்கப்பட்டு மீண்டும் செயல்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !