அரசு பள்ளி மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி
அன்னுார்; மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிக்கு, அன்னுார் மாணவர்கள் மூவர் தகுதி பெற்றுள்ளனர்.பள்ளிக்கல்வித்துறை சார்பில், தொடக்க, நடுநிலை பள்ளிகளில், வட்டார அளவில் கலைத்திருவிழா நடந்தது. இதில் வட்டார அளவில் முதல், இரண்டு இடங்கள் பிடித்தவர்களுக்கு, மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் கோவையில் நடந்தது. இதில் வடக்கலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் லோகிதன், பல குரல் பேச்சில் மாவட்ட அளவில் முதலிடம் வென்றார். இதே பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி நந்தனா, நகைச்சுவை பேச்சில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.நாகமாபுதூர் துவக்கப்பள்ளி மாணவி ஐஸ்வர்யா, மாறுவேடப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் வென்றார். மூவரும் வருகிற டிச. 3ம் தேதி நடைபெற உள்ள மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்கள், வழிகாட்டி ஆசிரியர்கள் ஜெகதாம்பாள், விஜயா, தலைமையாசிரியர் சாரதி ஆகியோருக்கு கல்வி குழு நிர்வாகிகள், அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.