அரசு பள்ளிகளில் இரவு காவலர் பணியிடம் காலியால் பாதிப்பு
வால்பாறை; அரசுப்பள்ளிகளில் இரவுக்காவலர்கள் பணியிடம் காலியாக உள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி வருகிறது.வால்பாறையில் அட்டகட்டி, வால்பாறை, சோலையாறுடேம் ஆகிய பகுதிகளில் நான்கு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.ரொட்டிக்கடை, சின்கோனா, வாட்டர்பால்ஸ், காடம்பாறை ஆகிய இடங்களில் அரசு உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்தபள்ளிகளில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: 'வால்பாறையில் இந்த அரசு பள்ளிகளில் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளன. இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை மற்றும் இரவு தங்கி படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புக்கள் எடுக்க முடியவில்லை.ஆசிரியர்களுக்கும், பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் இரவு காவலர் பணியிடம் காலியாக உள்ளதால், பள்ளி வளாகத்தில் மாலை நேரத்தில் சமூக விரோதிகள் நுழைந்து திறந்த வெளி 'பார்' ஆக மாற்றி வருகின்றனர்.இதனால் காலை பள்ளி திறக்கும் போது, காலி மதுபாட்டில்களையும், பிளாஸ்டிக் டம்ளர்களையும் அப்புறப்படுத்திய பின், பள்ளியை திறக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினர்.