தங்கக்கட்டி விற்பனையகங்களில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனை
கோவை: கோவையில், தங்கக்கட்டி மற்றும் தங்க நகை விற்பனை செய்யும் 12 நிறுவனங்களில், வரி மோசடி தொடர்பாக, ஜி.எஸ்.டி.,அதிகாரிகள் சோதனை நடத்தினர். தங்க நகைப்பட்டறைகளுக்கு தங்கம் வினியோகிப்பதற்கான, 'புல்லியன்' எனப்படும் தங்கக் கட்டிகள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், கோவை பெரிய கடை வீதி, ராஜ வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. இக்கடைகளில் தங்கக் கட்டி மற்றும் தங்க நகை விற்பனையில், ஜி.எஸ்.டி., மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில், அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். ஸ்ரீனிவாசா புல்லியன், தாஷ்னா கோல்டு, ராயல் சில்வர்ஸ், ஸ்ரீ தீக்ஷா புல்லியன் உட்பட 12 இடங்களில், ஜி.எஸ்.டி., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிகாரிகள் கூறுகையில், 'ஜி.எஸ்.டி., சரியாக செலுத்தாமல், மோசடி செய்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடக்கிறது. வரி ஆவணங்கள், கம்ப்யூட்டர்களில் உள்ள விவரங்களைக் கைப்பற்றி, சோதனை செய்யப்படுகிறது. வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.