27 அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரைவில் ஹைடெக் லேப் வருகிறது
கோவை: அரசு பள்ளிகளில், மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை வளர்க்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள உயர்தர தொழில்நுட்ப ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்கள்) போன்று, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் அமைக்கப்படவுள்ளன. மாணவர்கள் கணினி வழியாக பாடம் கற்பதற்கும், கணினி நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும், 'கெல்ட்ரான்' நிறுவனம் வாயிலாக, அரசுப் பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன. தற்போது இந்த திட்டம், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 177 அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக 27 மேல்நிலைப்பள்ளிகளில், ஹைடெக் ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளன. அரசு பள்ளிகளில் ஆய்வகம் அமைக்கும் பணி நிறைவடைந்ததும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 'கெல்ட்ரான்' நிறுவனம், இந்த பணிகளைத் தொடங்கும். கோவை நகர வட்டார வள மையத்திற்கு உட்பட்ட 10 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள், சர்க்கார் சாமக்குளம் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட, 6 மேல்நிலைப்பள்ளிகள் என, 15 வட்டார வளமையங்களின் கீழ் செயல்படும், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில், இந்த நவீன தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளன.