அரசுப்பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகங்கள்; தகுந்த பயிற்றுனர்கள் நியமிக்கப்படுவார்களா?
கோவை; அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி அடிப்படையிலான திறன்களை ஊக்குவிக்க, தமிழகம் முழுவதும் நடுநிலைப்பள்ளிகளில், 'ஹைடெக்' ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.கோவை மாவட்டத்தில் உள்ள 291 பள்ளிகளில், 219 பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆய்வகத்திலும் 10 கணினிகள், எல்சிடி புரொஜெக்டர், தொடுதிரை, கேமரா, மும்முனை மின் இணைப்பு, தடையில்லா மின் உபகரணங்கள், பேட்டரி ஆதரவு மின்கலம், 100 எம்பிபிஎஸ் இணைய வசதி போன்ற நவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.ஹைடெக் ஆய்வகத்துடன் இணைந்து, ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் 607 நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்பார்ப்பு
ஹைடெக் ஆய்வகத்திற்கு பொறுப்பாசிரியர் நியமிக்கப்பட்டு, அவருக்கான பணிகளும் பட்டியலிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்களை மாணவர் பயிற்சிக்குப் பயன்படுத்தும் விதத்தில், பொறுப்பாசிரியர்களுக்கு தேவையான வழிகாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.இதே நேரத்தில், ஆய்வக பயிற்றுனர்கள், தனியார் ஒப்பந்தத்தின் வாயிலாக, நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே சில பள்ளிகளில் ஆய்வகங்கள் இயங்கி வந்தாலும், அந்த இடங்களில் பயிற்றுனர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் அந்த ஆய்வகங்களை முழுமையாகப் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.புதிய ஹைடெக் ஆய்வகங்களிலாவது, பயிற்றுனர்கள் நியமிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.