உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேம்பால ரவுண்டானாவை அகலப்படுத்தணும் திட்ட அறிக்கை தயாரிக்கும் நெடுஞ்சாலைத்துறை

மேம்பால ரவுண்டானாவை அகலப்படுத்தணும் திட்ட அறிக்கை தயாரிக்கும் நெடுஞ்சாலைத்துறை

கோவை: கோவை - அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்தில், நேற்று முன் தினம் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 'ரவுண்டானா'வை (ரோட்டரி) நான்கு புறமும் அகலப்படுத்த வேண்டுமென்கிற கோரிக்கை, பல தரப்பிலும் எழுந்திருக்கிறது.இம்மேம்பால 'ரவுண்டானா' என்பது, அவிநாசி ரோடு - கூட்ஸ் ஷெட் ரோடு - மில் ரோடு - ப்ரூக்பாண்ட் ரோடு ஆகிய நான்கு ரோடுகளை இணைக்கிறது. இந்த ரோடுகளில் வரும் வாகன ஓட்டிகள், 'ரோட்டரி'யை சுற்றி வந்து, செல்ல வேண்டிய ரோட்டுக்கு செல்கின்றனர். மழை பெய்யும்போது, பாலத்துக்கு கீழ் தண்ணீர் தேங்கினால், நான்கு ரோடுகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், 'ரோட்டரி'யை பயன்படுத்துகின்றன. அச்சமயங்களில், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதனால், அருகாமையில் உள்ள காலியிடத்தில் துாண்கள் எழுப்பி, மேம்பாலத்தை விஸ்தரிக்க ஆலோசிக்கப்பட்டது.இதற்கான சாத்தியக்கூறுகளை, மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழு கோட்ட பொறியாளர் மனுநீதி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் இருப்பதால், 5 மீட்டர் அகலத்துக்கு 'ரவுண்டானா' மற்றும் மேம்பாலப் பகுதியை அகலப்படுத்தலாம் என, வரைபடம் தயாரித்து, மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்தனர்.தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் தடையின்மை சான்று (என்.ஓ.சி.,) பெற்று, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை புதிய மேம்பாலம் கட்டும் மாநில நெடுஞ்சாலைத்துறையினரே இப்பணியையும் சேர்த்து மேற்கொள்ள, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தினார்.அதற்கு, 'ரவுண்டானா' சுற்றியுள்ள நான்கு ரோடுகளையும் அகலப்படுத்தி, மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு இருப்பதாகவும், விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருவதாகவும் அத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.நிதி ஒதுக்கீட்டுக்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு விரைவில் திட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி