மகளிரை தொழில் முனைவோராக்கும் இல்லம் தேடி பயிற்சி திட்டம்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் உள்ள ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி சார்பில், கோவில்பாளையம் ஆர்.ஐ., அலுவலக வளாகத்தில் எம்.எஸ்.எம்.இ., 3.0 திட்டத்தின் கீழ் கிராமப்புற மகளிரை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கில், 'இல்லம் தேடி பயிற்சி' திட்டம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை, கோவை மாவட்ட எம்.எஸ்.எம்.இ., உதவி இயக்குனர் கயல்விழி கலந்து கொண்டு துவக்கி வைத்து பேசுகையில், 'கிராமப்புற மகளிர் தங்கள் திறன்களை பயன்படுத்தி சுயதொழில் தொடங்குவதன் வாயிலாக, பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும். மேலும், அரசு வழங்கும் பல்வேறு தொழில் உதவி திட்டங்களை மகளிர் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,' என்றார். இந்த பயிற்சித் திட்டத்தை ஈஸ்வர் பொறியியல் கல்லூரி ஆராய்ச்சி மற்றும் சமூக சேவை பிரிவு டீன் கருப்புசாமி ஒருங்கிணைந்து நடத்தினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்று பேசினார். பிரியா நன்றியுரை வழங்கினார். திட்டத்தின் வழிகாட்டி விஷ்ணு சக்கரவர்த்தி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தையல், அழகு பராமரிப்பு, கைத்தறி பொருட்கள், பேக்கரி, மெழுகுவர்த்தி தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை பெற்றனர். இந்த பயிற்சி திட்டம் வரும் 6ம் தேதி வரை நடக்கிறது. பயிற்சியின் முடிவில் பங்கேற்கும் மகளிருக்கு, சுயதொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் மற்றும் அரசு உதவி திட்டங்கள் குறித்து முழுமையான தகவல்கள் வழங்கப்பட உள்ளது.