நாம் வீடு கட்டுவதற்கு முன்பே கட்டப்போகும் வீட்டுக்கான ஒரு சதுர அடி விலையை எப்படி நிர்ணயம் செய்வது என்பது குறித்து விளக்கமளிக்கிறார், கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியளர்கள் சங்கம் (காட்சியா) உறுப்பினர் வஞ்சிமுத்து:ஒருவர் வீடு கட்ட ஆரம்பிக்கும் போது, ஒரு பொறியாளரிடம் கேட்கக்கூடிய முதல் கேள்வி, ஒரு சதுர அடிக்கு எவ்வளவு செலவாகும் என்பதுதான்.வீடு கட்டப்போகும் இடத்தின், மண்ணின் தன்மையை பொறுத்துதான், அஸ்திவாரத்தின் ஆழத்தை முடிவு செய்ய முடியும். அதே மாதிரி, எத்தனை தளங்களை கொண்டு கட்ட போகிறோம் என்பதை பொருத்து, அஸ்திவாரத்தின் ஆழம் மாறுபடும்.அதே மாதிரி, பேஸ்மென்ட் உயரம் அணுகு சாலையின் தன்மை, அது மண் சாலையா, மெட்டல் சாலையா, தார் சாலையா, அணுகுசாலையுடன் இணையும் பிரதான சாலையின் தன்மை, அதனுடைய உயரம், ஆகியவற்றை பொருத்து அஸ்திவாரத்தின் உயரத்தை உயர்த்த, முடிவு செய்ய வேண்டும்.அதே மாதிரி, தரைத்தளத்தில் பார்க்கிங் மட்டும் பயன்படுத்தப்போகிறோமா அல்லது குடியிருப்பாக பயன்படுத்த போகிறோமா என்பதை பொருத்து, பேஸ்மென்ட் உயரத்தை முடிவு செய்ய வேண்டும்.கட்டட பிளானில் ஒரு தளத்தில் எத்தனை அறைகள் இருக்கிறது, அந்த அறையின் நீள, அகலம் எவ்வளவு, அந்த தளத்தில் எத்தனை கிச்சன் மற்றும் கழிவறை உள்ளது என்பதன் அடிப்படையில், விலை மாறுபடும்.மனையை சுற்றி இருக்கும் மனைகளில், ஏற்கனவே கட்டடம்உள்ளதா, காலியாக இருக்கிறதா, அணுகு சாலையின் அகலம், கட்டடம் கட்ட தேவையான பொருட்களை சேமித்து வைப்பதற்கான அளவு இட வசதியை பொருத்து, விலை நிர்ணயம் செய்ய முடியும்.கட்டுமான பொருட்களின் தரம், எந்த மாதிரி கட்டுமான பொருட்களை பயன்படுத்த போகிறோம், குறிப்பாக பிளம்பிங், எலக்ட்ரிக்கல், கார்பென்டர், டைல்ஸ், பெயின்டிங், எந்த பிராண்ட் சிமென்ட், கம்பி, பிளைஏஷ் கற்களின் தரம், மணல் அல்லது எம்.சேண்ட் ஆகியவற்றின் விலை பட்டியலுடன், மேற்சொன்ன விஷயங்களை கருத்தில் கொண்டு, விரிவான 'எஸ்டிமேட்' தயார் செய்து அதில் கட்டுமான பொருட்களின் ஆதார விலையையும்குறிப்பிட்டு, கணக்கீடு செய்ய வேண்டும். அவற்றுடன், மற்ற விஷயங்களையும் ஆலோசித்து, கட்டடம் தரமானதாகவும் பெரிய அளவில் செலவு மாறுபாடு இல்லாமலும், சிறந்த கட்டடத்தை கட்டலாம். இவ்வாறு, அவர்கூறினார்.