சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவிக்கிறேன்: மகன்களிடம் ஜீவனாம்சம் கேட்டு தாய் மனு
கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில், சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்ட மகன்களிடம், ஜீவனாம்சம் பெற்றுத்தரக்கோரி மூதாட்டி, கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு அளித்தார். கோவை கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்ப்புக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொள்ளாச்சியை சேர்ந்த அங்கம்மாள், 75, என்பவர் கொடுத்த மனுவில், 'எனதுசொத்துக்களை மகன்கள் எழுதி வாங்கி, சுத்தக் கிரையம் செய்து கொண்டனர். என்னை கவனிப்பதில்லை. செலவுக்கு கூட பணம் தராமல் அலைக்கழிக்கின்றனர். அன்றாடம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தடுமாறுகிறேன். கணவரை இழந்த எனக்கு வாழ்வாதாரத்துக்கு, மகன்களிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத்தர வேண்டும்' என கூறியிருந்தார். வைரமுத்து மீது புகார் சென்னை கம்பன் கழக பொன்விழாவில், ராமபிரான் குறித்து இழிவாக பேசிய கவிஞர் வைரமுத்து மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, கொங்கு மண்டலம் ஸ்ரீ நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தலைமையில், ராம பக்தர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். நகைச்சீட்டு மோசடி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், 'நாங்கள் 68 பேர் பி.என்.புதூரில் உள்ள தங்க நகைக்கடையில் மாதத்தவணையாக நகைச்சீட்டுக்கு, பணம் செலுத்தி வந்தோம். அதன் உரிமையாளர் நகையையும், பணத்தையும் தராமல் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி விட்டார். நாங்கள் கொடுத்த பணத்தை பெற்றுத்தர, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தனர். தெருநாய் தொல்லை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கொடுத்த மனுவில், 'கோவை மாநகராட்சியில்,தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 'குழந்தைகளும், வயோதிகர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோளாக கொண்டு, கோவை மாநகராட்சியிலும் நாய்களுக்கு தடுப்பூசி, கருத்தடை செய்து காப்பகத்தில் அடைக்க வேண்டும்' என வலியுறுத்தினர்.
கோழிப்பண்ணைக்கு எதிர்ப்பு
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அளித்த மனுவில், 'சூலுார் தாலுகா சுல்தான்பேட்டை ஒன்றியம், ஜே.கிருஷ்ணாபுரம் மற்றும் வஞ்சிபுரம் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில், முட்டை கோழி பண்ணை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அருகிலுள்ள விவசாய நிலங்கள், வஞ்சிபுரம் கிராமம் மற்றும் ஜே.கிருஷ்ணாபுரம் கிராம மக்களுக்கு சுகாதார சீர்கேடு, நிலத்தடி நீர் பிரச்னை ஏற்படும். இந்நிலத்துக்கு அருகே பி.ஏ.பி.பாசன வாய்க்கால், அரசு பள்ளியும் அமைந்துள்ளது. அங்கு பண்ணை அமைக்க தடை விதிக்க வேண்டும்' என கூறியிருந்தனர். அத்துடன் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் செய்தனர்.