உள்கட்டமைப்பு வளர்ந்தால் ஐ.டி.நிறுவனங்கள் வருகை அதிகரிக்கும்
கோவை:தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடி கோவையில் அதிக ஐ.டி. நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தமிழக அரசு சார்பில் டைடல் பார்க், எல்காட் ஐ.டி. பார்க் உள்ளது. ஏராளமான தனியார் ஐ.டி. பார்க்குகள் உள்ளன. சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே போன்ற பெரு நகரங்களில் அதிக செலவு, இட நெருக்கடி போன்ற பிரச்னைகள் உள்ளன. பெரு நிறுவனங்களின் பார்வை, இரண்டாம் கட்ட நகரங்கள் மீது விழுந்துள்ளது. அதை அறுவடை செய்து கோவையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்ல, உள்கட்டமைப்பு வசதி பற்றாக்குறையாக உள்ளது என்கிறார், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கவுரவ செயலர் பிரதீப். அவர் கூறியதாவது: கோவையில் நிறைய மருத்துவமனைகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் திறமையான இளைஞர்கள் கிடைப்பார்கள் என்கிற ஆசையில் பல வெளி மாநில, வெளிநாட்டு நிறுவனங்கள் கோவை வருகின்றன. குறுகலான சாலை, போதிய தண்ணீர் வசதி இல்லாதது, போக்குவரத்து நெரிசல், முறையான சாக்கடை வசதி இல்லை. அனைத்து பகுதிகளையும் இணைப்பதற்கான போக்குவரத்து வசதியும் குறைவாக உள்ளது. சரவணம்பட்டி மேம்பாலம், மெட்ரோ, ரோடு விரிவாக்கம், விமான நிலைய விரிவாக்கம், ரிங் ரோடு உள்ளிட்ட எந்த வேலையும் நடக்கவில்லை. இப்போதே இவ்வளவு நெருக்கடி என்றால், முதலீடு செய்த பிறகு வரும் மக்கள் தொகையை கோவை தாங்குமா என்பது யோசிக்க வேண்டிய விஷயம். முதலீட்டாளர்களும் இதை யோசிக்கின்றனர். இடம், பணம் இருந்தால் கட்டடம் கட்டிவிடலாம். உள்கட்டமைப்பு இருந்தால் மட்டுமே வளர்ச்சி ஏற்படும். எனவே மத்திய, மாநில அரசுகள் கோவை உள்கட்டமைப்பில் மேம்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.