ஜி.எஸ்.டி., குறைப்பை அமல்படுத்த வலியுறுத்தல்
பொள்ளாச்சி: 'பொள்ளாச்சியில், ஜி.எஸ்.டி., குறைப்பை அமல்படுத்த வேண்டும்,' என, பா.ஜ. கோவை தெற்கு மாவட்ட தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். கோவை தெற்கு மாவட்ட பா.ஜ. தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், ஜி.எஸ்.டி., குறைப்பை அமல்படுத்த வேண்டும் என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி கடந்த மாதம், ஒவ்வொரு பொருளுக்குமான ஜி.எஸ்.டி.யை குறைத்து அறிவித்தார். அந்த வரி சலுகை கடந்த, 22ம் தேதி முதல் அமலுக்கு வருமென்று மத்திய அரசின் சுற்றறிக்கையில் இருந்தது. மத்திய அரசின் அறிக்கையின்படி, 18 சதவீதம் முதல், ஐந்து சதவீதம் வரை வரி குறைக்கப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி நகரப்பகுதிகளில் உள்ள கடைகளில், எவ்விதமான வரி குறைப்பு நடத்தாமல் பழைய முறைப்படியே கட்டணம் வசூலிக்கின்றனர். டீ, காபி, பேக்கரி பொருட்களில் வரி குறைப்பு செய்யவில்லை. எனவே, இதற்காக சிறப்பு குழு அமைத்து கடை உரிமையாளர்களிடம் பேசி, ஜி.எஸ்.டி. விலை குறைப்பு பலனை பொதுமக்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.